Sunday 11 December 2016

மீலாதுன் நபி ஜனனம் கொண்டாடுவோம்

ஆரம்பமாக உங்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களின் 1491-வது பிறந்த தின விழா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பூமான் நபி (ஸல்)  அவர்களின் பிறந்த மீலாது தினத்தை இன்று உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நபி (ஸல்)  அவர்களின் மாண்புகளை, சரிதைகளை எடுத்துச் சொல்கிற இது போன்ற மீலாது விழாக்களை நாம் வரவேற்க வேண்டும்.

நபி  (ஸல்) அவர்களின் வருகையை நினைத்து எடுத்துக் கூறி அகமகிழ வேண்டும் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயமாகவும் மக்களுக்கு ஆர்வப்படுத்தப்பட வேண்டிய விசயமாகவும் இருக்கிறது.

ஹஸ்ரத் புரைதா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி (ஸல்) அவர்கள் புனிதப்போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வந்தார்கள். அப்போது ஒரு பெண்மணி நபியவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ்!  நீங்கள் போரில் வெற்றி பெற்று திரும்பினால் நான் தப் (மோளம்) அடிப்பதாக நேர்ச்சை செய்திருக்கிறேன். அதை நிறைவேற்றலாமா...? எனக் கேட்டார்கள். நபி (ஸல்)  அவர்கள் அவ்வாறு நீ நேர்ச்சை செய்திருந்தால் நீ நிறைவேற்று. இல்லையென்றால் வேண்டாம் என்றார்கள். அந்தப் பெண்மணி தப் (மோளம்) அடித்து கொண்டிருந்த போது சிறிது நேரத்தில் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் வந்தார்கள. அப்போதும் அந்த பெண்மணி தப் அடித்துக் கொண்டிருந்தாள், சிறிது நேரத்தில் அலி ரலி அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் அப்பெண்மணி தப் அடித்துக் கொண்டிருந்தாள், இன்னும் சிறிது நேரத்தில் உஸ்மான் ரலி அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் அப்பெண்மணி தப் அடித்துக் கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரம் கழித்து உள்ளே உமர் ரலி அவர்கள் வந்தார்கள. உடனே அப்பெண்மணி அந்த தப்பை (மோளத்தை) கீழே வைத்து அதன் மேலே அமர்ந்து கொண்டாள். இதைக் கண்ட நபி (ஸல்)  அவர்கள்  உமரே! ஷைத்தான் உம்மைக் கண்டு பயப்படுகிறான் என்றார்கள். நான் இருந்தேன.அப்போதும் அப்பெண்மணி தப் அடித்தாள். பின்பு அபூபக்கர் வந்தார். அப்போதும் அப்பெண்மணி அடித்துக் கொண்டிருந்தாள், அலி ரலி வந்தார்கள. அப்போதும் அப்பெண்மணி நிறுத்தவில்லை, அதன் பிறகு உஸ்மான் ரலி வந்த போதும் அப்பெண்மணி தப் அடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் நீங்கள் வந்ததம் அப்பெண்மணி தப் அடிப்பதை நிறுத்தி கீழே வைத்து விட்டு ஒன்றும் தெரியாததை போல அமர்ந்து விட்டாள் என்றார்கள்.
                                              நூல் : திர்மிதி.

இந்த ஹதீஸில் நமக்கு பல பாடங்கள் இருக்கிறது.

முதலாவது ; இது போன்ற சந்தோசமான தருனங்களில் தப் (மோளம்) அடிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயம்.

இரண்டாவது ; பயணத்திலிருந்து திரும்புவது சந்தோசமான விசயம் அதைக் கொண்டாடலாம் என்றால், இவ்வுலகிற்கு வருகை தந்த பூமான் நபி  (ஸல்)  அவர்களின் பிறப்பை சந்தோசமாக  ஆனந்தமாக கொண்டாடுவது அது ஏற்புடைய விசயம் என்பது இங்கு நமக்கு தெளிவாக தெரிகின்றது.

பொதுவாக வணக்கம் சார்ந்த ஒரு காரியத்தைக் கொண்டு தான் நேர்த்திக் கடன் செய்ய முடியும். இங்கே தப் அடிப்பது என்பது ஒரு வணக்கமே அல்ல ஆனால் நபி (ஸல்) அவர்கள் போருக்கு சென்று பத்திரமாக திரும்பி வந்து விட்டார்கள் என்பதை சந்தோசமாக ஆனந்தமாக வெளிப்படுத்துவது என்பது வணக்கமாகும். இந்த வகையில் வணக்கத்தைக் கொண்டு நேர்ச்சை செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. என்று மார்க்க சட்ட வல்லுனர்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள்,

மற்றொரு விசயம் ஹஸ்ரத் உமர் ரலி வருகிறார்கள் என்றதும் அந்த பெண்மணி மோளம் அடிப்பதை நிறுத்தி விட்டு அதை கீழே வைத்து அதன் மேலே அமர்ந்து கொண்டாள். அப்போது நபி  (ஸல்)  அவர்கள் உமரே! சைத்தான் உம்மைக் கண்டு பயப்படுகிறான் எனறார்கள். இங்கே நபியவர்கள் அந்தப் பெண்ணியை ஷைத்தான் என்று சொல்கிறார்கள் என்று தவறாக பலர் விளங்கிக் கொண்டதைப் போல நாமும் விளங்கிக் கொள்ள கூடாது.

அந்த பெண்மணி பாடிய பாடல் மார்க்கத்திற்கு விரோதமானது. எனவே தான்  உமர் ரலி அவர்கள் வந்ததம் அதை அவள் நிறுத்தி விட்டாள் என்றும் நாம் கருதக்கூடாது. ஏனென்றால் மார்க்கத்திற்கு முரணான செயல்களை நபியவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இங்கே அந்த பெண்மணி நபியவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களின் அனுமதியோடு தப் அடித்து பாடினாள் என்றால் அது அனுமதிக்கப்பட்டது என்பதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஷைத்தான் உங்களைக் கண்டு பயப்படுகிறான் என்றால் இங்கே அந்த பெண்மணி ஷைத்தான் என்பது பொருளல்ல. மாறாக அந்த ஷைத்தானே உங்களைக் கண்டு பயப்படுகிறான் என்றால் இந்த பெண்மணி உங்களைப் பார்த்து எப்படி பயப்படாமல் இருப்பாள் என்ற கருத்தில் தான் நபியவர்கள் இங்கு சொல்கிறார்களே தவிர அந்த பெண்மணியைப் பார்த்து நபியவர்கள் சொன்னார்கள் என்று விளங்கிக் கொள்ள கூடாது.

பொதுவாக உமர் பின் கத்தாப் ரலி அவர்களின் வரலாற்றைப் படித்தவர்கள் ஒரு விசயத்தை விளங்கிக் கொள்வார்கள். அவர்களைக் கண்டாலே எல்லோரும் பயப்படுவார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் அவர்களின் மனைவிமார்கள் சிரித்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். வெளியில் ஹஸ்ரத் உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் நபியவரை சந்திக்க வருகிறார்கள் என்று தெரிந்ததும் பேச்சை நிறுத்தி விட்டு எல்லோரும் உள்ளே சென்று விட்டார்கள். நபியவர்கள் உமர் ரலி அவர்களிடம் உமரே! பார்த்தீரா? எல்லோரும் ஓடிப்போய் விட்டார்கள் என்று சொன்னதும் உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் விரோதிகளே அல்லாஹ்வின் ரசூலைக் கண்டு பயப்படாமல் என்னைக் கண்டு பயப்படுகிறீர்களா என்று உரத்த குரலில் கண்டித்தார்கள். இதைக் கேட்ட மனைவிமார்கள் உள்ளே இருந்து கொண்டு சொன்னார்கள் அல்லாஹ்வின் ரசூல் அவர்கள் ரொம்ப மென்மையானவர்கள் நீங்கள் அவ்வாறல்ல என்று சொன்னார்கள். உமர் பின் கத்தாப் ரலி அவர்களைக் கண்டு அஞ்சுவது என்பது அல்லாஹ் அவர்களின் தோற்றத்திற்கு வைத்த ஒரு சிறப்பம்சமாகும். இதுபோன்ற பல சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் பார்க்க முடிகின்றது.

ஹஸ்ரத் அஸ்வத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நான் நபி  (ஸல்)  அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் நான் அல்லாஹ்வை புகழ்ந்து சில கவிதைகளை பாடியிருக்கின்றேன். அதை தங்களுக்கு முன்னிலையில் இப்போது பாடவா என்று கேட்டார்கள். அல்லாஹ் புகழை விரும்புகிறான. நீ எதைக் கொண்டு புகழ்ந்தாயோ அதை கொண்டு வா பார்க்கலாம் என்றார்கள். நான் பாடத்துவங்கினேன். அப்போது ஒருவர் உள்ளே வர அனுமதி கோரினார். நபியவர்கள் என்னை அமைதியாக இருக்கும்படி சொன்னார்கள். நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். அவர் பேசி விட்டு சென்ற பிறகு நான் மீண்டும் பாடினேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர் வந்தார் நபியவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்கும்படி என்னை கூறினார்கள்  நானும் அவருக்காக வேண்டி அமைதியாக இருந்து அவர் சென்ற பிறகு நபியவர்களிடம் கேட்டேன் யாரசூலல்லாஹ் அவர் யார்...? எனக் கேட்டேன். நபியவர்கள் அவர் ஹஸ்ரத் உமர் பின் கத்தாப் ரலி அவர்கள. இது போன்ற விசயங்களை அவர் விரும்ப மாட்டார் என்றார்கள். இந்த ஹதீஸை இமாம் அஹமத் பின் ஹன்பல் ரஹ் அவர்கள் தங்கள் கிதாபில் பதிவு செய்திருக்கிறார்கள்.

பொதுவாக பாடல்கள் என்பது அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி மோசமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இஸ்லாம் பாடல்களை விரும்பவில்லை, ஆனால் நல்ல கருத்துடைய பாடல்களை இஸ்லாம் தடுக்கவும் இல்லை.

மேற்கூறிய ஹதீஸில் நபியவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து பாடுவதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஹஸ்ரத் உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் வந்ததும் பாடலை நிறுத்த சொல்ல காரணம் என்னவென்றால, அவர் பாடிய பாடல்களில் நல்ல கருத்து இருந்தாலும் கூட பொதுவாக பாடல்கள் என்றாலே அதன் தோற்றம் நல்ல விசயமாக இல்லாமலிருந்தது. ஆகையால் உமர் ரலி போன்றவர்கள் விரும்புவதில்லை.

மார்க்கத்திற்கு எதிரான காரியங்களைக் கண்டால் அதற்கு எதிராக பொங்கியெழுகின்ற உமர் ரலி அவர்களின் குணத்தை நபியவர்கள் மாற்றவும் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் நபியவர்கள் உமர் ரலி அவர்கள் சென்றதன் பின்பு மீண்டும் பாடச் சொன்னார்கள் என்பதை பார்க்கும் போது அல்லாஹ்வை புகழுவது என்பது தடுக்க கூடிய காரியம் அல்ல என்பதற்காகத் தான்

உமர் ரலி அவர்களுக்காக நிறுத்தச் சொன்னது பொதுவாக சிலருக்கு சில காரியம் பிடிக்காது என்பதற்காக அவர்களின் உணர்வை மதித்து உத்தம திரு நபியவர்கள் சிறிது நேரம் நிறுத்தச் செய்தார்கள்.

நபியவர்களின் பிறந்த தினமான மீலாது சம்பந்தமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி ;

உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு பல்கலை கழகமான எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் அல்ஹஸர் பல்கலை கழகத்தின் தாருல் பத்வா (தீர்ப்பு) வெளியாகி இருக்கின்றது. நபி  (ஸல்)  அவர்களின் பிறந்த தினமான மீலாதை கொண்டாடுவது அமல்களில் சிறப்பானதாகவும் வணக்கங்களில் மேன்மையானதாகவும் கருதப்படும். ஏனென்றால் அது நபிகளின் மீதான பிரியம் மற்றும் சந்தோசத்தை வெளிப்படுத்துவது என்று தான் கூறப்படும். நிச்சயமாக அது ஈமானின் அடிப்படையில் உண்டானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; உங்களில் ஒருவர் அவரின் தந்தை குழந்தை மக்கள் அனைவரையும் விட அவரது உள்ளத்தில் நான் பிரியமானவராக ஆகும் வரை அவர் உண்மை முஃமினாக ஆகமுடியாது என்றார்கள்.

அண்ணலாரின் பிறப்பை கொண்டாடுவது என்பது, நபி  (ஸல்)  அவர்களின் பிறப்பு அல்லாஹ் இந்த அகிலத்தாருக்கு பொழிந்த மாபெரும் அருளாகும். அருளுக்கு நன்றி செலுத்துவது புகழுக்குரிய ஒரு செயல். அதை செய்பவர் பழிக்கப்பட மாட்டார். மாறாக புகழப்படுவார் நன்றி செலுத்தியவராக கருதப்படுவார்.

இது விசயத்தில் நபி (ஸல்)   அவர்களின் வழிகாட்டல்கள் இருக்கின்றது. நபியவர்கள் தங்கள் பிறந்த நாளில் நன்றி செலுத்தியுள்ளார்கள். ஸஹீஹான ஹதீஸில் நபியவர்கள் ஒவ்வொரு திங்கட் கிழமை நோன்பு வைத்தார்கள் அதற்கு காரணமாக "அந்த நாளில் தான் நான் பிறதேன்." என்றார்கள் இந்த ஹதீஸ் முஸ்லீம் ஷரீபில் பதிவாகி இருக்கின்றது.

திங்கட்கிழமை பிறந்தார்கள் என்பதற்காக அந்த நாளில் நபியவர்கள் நோன்பு வைத்து நன்றி செலுத்தினார்கள் என்றால் அவர்களின் பிறப்பிற்கு முஸ்லிம் உம்மத்தினர் நிச்சயமாக தகுதி பெற்றவர்கள் தான்.

முஸ்லிம்கள் அனுசரிக்கும் மீலாது விழாக்களின் நோக்கம் அல்லாஹ்வை நினைத்து திக்ரு செய்வது. நபி  (ஸல்)  அவர்களை புகழ்ந்து கவிதை படிப்பது. அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைப்பது. அல்லாஹ்வுக்காக ஏழை எளிய மக்களுக்கு ஸதக்காவாக உணவளிப்பது போன்றவை தான். நபியவர்கள் மீதான பிரியத்தை வெளிப்படுத்தவே இது போன்ற நற்பணிகள் செய்யப்படுகின்றது.

நபி (ஸல்)  அவர்களின் பிறந்த நாளில் இனிப்பு வழங்குவது ஆகுமான காரியமேயாகும், அதை தடுப்பதற்கும், அந்த நேரமற்ற மற்ற நேரங்களில் இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. மட்டுமல்ல இனிப்புகளை உறவினர்களுக்கு கொடுத்தனுப்புவதினால் உறவுகள் மலரும் மட்டுமல்ல அது முஸ்தஹப்பான காரியமாகும். ஸாலிஹான நல்ல நோக்கமே அதன் காரணமாகும்.

சில இடங்களில் மீலாது ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது அப்பேரணியில் மார்க்க வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள் ஏந்தப்படுகிறது. நபி  (ஸல்)  அவர்கள் மீது புகழ்கள, உலக வாழ்க்கையின் மீது பற்றின்மையை விளக்கும் கவிதைகள் பாடல்களாக பாடப்படுகிறது. அதன் மூலம் மார்க்கத்தின் முக்கிய பணிகளுக்கு பாதிப்பில்லை. அத்துடன் மார்க்கம் தடுத்த காரியங்கள் அங்கு நடைபெறவில்லை என்றால் அதை செய்வதில் எந்த குற்றமும் இல்லை.  அவ்வாறே மீலாது ஊர்வலங்களில் தப் (மோளம்) அடிப்பதில் குற்றமல்லை.  ஏனெனில் நபிகள் நாயகம்   (ஸல்)  அவர்கள் திருமணங்களில் தப் அடித்திட அனுமதித்துள்ளார்கள்.

திருமணத்தை பிரபலப்படுத்துங்கள் அதை பள்ளிவாசல்களில் நடத்துங்கள் திருமணத்தில் தப் அடியுங்கள் என்ற ஹதீஸ் திர்மிதி ஷரீபில் வருகின்றது.

அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பிறப்பை தப் அடித்து கொண்டாடுவது திருமணத்தை விட ஏற்றமானது அல்லவா...?  என்றாலும் ஒழுக்கம் கண்ணியம் பேண வேண்டும் என்று எகிப்தினுடைய அல்ஹஸர் பல்கலை கழகம் தனது பத்வாவை தெளிவுபடுத்தியிருக்கின்றது.

ஆகவே முஸ்லிம்களாகிய நாம் நபி  (ஸல்)  அவர்களின் ஜனனத்தை மீலாதை கொண்டாடுவோம். நமது உயிரினும் மேலான அண்ணல் நபி  (ஸல்)  அவர்களின் வாழ்வினை பின்பற்றுவோம். வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்துவோம்.

1 comment:

  1. கண்ணியத்திற்குரிய ஹஜ்ரத்! இந்த விஷயத்தில் தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா என்ன?

    ReplyDelete

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks