Sunday 23 March 2014

புதிரும் பதிலும் - 3



பிரார்த்தனை ஏற்கப்படாததேன்?

ஒரு நாள் மகான் இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் பஸராவின் கடைத்தெரு வழியாக நடந்து சென்றார்கள்.அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள்!

நாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.அவனிடம் அதிகமாகப் பிரார்த்திக்கிறோம்.ஏனோ அல்லாஹ் எங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை.இது ஏன்? என்று வினவி னார்கள்.

அதற்கு இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அது ஏனென்றால், உங்கள் இதயங்கள் பத்து செயல்களைக் கொண்டு மரித்துப் போய் விட்டது.

1)     அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள்.ஆனால் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில்லை.

2)      அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்களை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் அவர்களின் சுன்னத்தான நடைமுறைகளை விட்டு விட்டீர்கள்.

3)      குர்ஆன் ஓதுகிறீர்கள்.அதன் படி நடப்பதில்லை.

4)      அல்லாஹ்வின் அருள்கொடை [யான உணவு] களை உண்ணுகிறீர்கள்.அதற்கு நன்றி செலுத்துவதில்லை.

5)      ஷைத்தான் உங்களுடைய விரோதி எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.ஆனால் அவனுக்கு மாறு செய்வதில்லை.

6)      சொர்க்கம் உண்மை எனச் சொல்லிக் கொண்டு அதற்காக அமல் செய்வதில்லை.

7)      நரகம் உண்மை எனச் கூறிக் கொண்டு அதை விட்டும் தப்ப வழி பார்ப்பதில்லை.

8)      மரணம் நிச்சயம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்காக ஆயத்தமாவதில்லை.

9)      உறக்கத்திலிருந்து விழித்ததும்,மக்களை குறை கூற ஆரம்பித்து விடுகிறீர்கள்.உங்கள் குறைகளை மறந்து விடுகிறீர்கள்.

10)  மரணமானவர்களை அடக்கம் செய்து கொண்டுதானிருக் கிறீர்கள்.ஆனால் அவர்களைக் கொண்டு படிப்பினை தான் பெறுவதில்லை.

இப்படி உங்கள் இதயம் இறந்து போயிருக்கும் போது எப்படி உங்கள் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.

விழித்துக் கொண்டிருக்கும் உள்ளத்திலிருந்து விழிப்பு நிலையில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks